Monday, July 06, 2015

பழந்தமிழர் அளவைகள் - 1

ஒருங்குறியிற் தமிழளவைகள், பின்னங்கள், சுருக்கங்கள் பற்றிய குறியீடுகளை அரங்கேற்றவேண்டி 2012 இல், ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு முனைவர் சிரீரமணசர்மா என்பார் முன்னீடளித்தார் (L2/12-231). தனிவட்டத்திற் சுற்றிவந்து தற்செயலாக 2014 இல் தமிழார்வலர் கவனத்திற்குள்ளான அது சில மாற்றங்களின்பின் இற்றைப்பட்டு (L2/15-078) ஐந்தாம்நிலை ஒப்புகைச் செலுத்தத்திற்காக (approval process; பார்க்க http://unicode.org/alloc/ISOStages.html) ஒருங்குறிச் சேர்த்திய உறுப்பினர்களின் வாக்குகளை நாடி (ballotting) அனைத்துநாட்டுத் தரப்பாட்டு ஒருங்கியத்தில் (International Standard Organization) காத்து நிற்கிறது. முன்னீட்டு வரைவு மாற்றங்களுக்கான (Proposed Draft Amendment - PDAM) இவ்வாக்கெடுப்பில் 2015 சூலை 20-இற்குள் ஒருங்குறிச்சேர்த்திய உறுப்பினரான தமிழக அரசு தன்கருத்தைச் சொல்லி அதை வைத்துக்கொண்டு இந்திய அரசு வாக்களிக்கவேண்டும்.

(ஒருங்குறி முன்னீடுகள் இப்படிச் சிவனேயென்று தனியாய்ச்சுற்றுவதோ, பெரும்பான்மைத் தமிழர் அதைக் கிஞ்சித்துங் கண்டுகொள்ளாதிருப்பதோ, 10 கோடித் தமிழ்மக்களின் தலைவிதியை எங்கோ எவரோ சற்றும் தொடர்பேயின்றி நிருணயிப்பதோ, இங்கு வழமையானதே. 44 ஆண்டுகள் இருகட்சிப் பங்காளிப் பிணக்குகளிற் சிக்கித் தமிழர் பந்தாடப்பட்டதால், உருப்படியான தமிழ்விதயங்களை நாம்தான் கவனிக்கவேயில்லையே?. தமிழர் தூங்கும்நேரத்தில் அவரைத் தாங்கியுள்ள இவ்வுலகம் அசையாது இருக்குமா, என்ன? “உள்ளூர்ச் சண்டையில் தமிழர் அடித்துச் சாவட்டும்; அதற்குள் தமிழுக்கு இந்திய அரசின் CDAC துணையோடு ஒருங்குறியில் தேவநாகரிச் சட்டகத்தால் அங்குமிங்கும் நகரமுடியாதபடிக் கட்டங் கட்டுவோம்; தமிழரை நமக்குள் செரித்துக்காட்டுவோம்” என்று 1980களின் முடிவிலிருந்தே சிலர் முயல்வதும், இச்சிக்கல்கள் பற்றி சில நூறு தமிழார்வலரே கவலுறுவதும் நடக்கிறது. இப்பொழுது ஏற்பட்டிருப்பது சிக்கல்களில் இன்னொன்று. இச்சிக்கல்கள் புரியாத் தமிழறிஞர் பலராவர். கணி, இணையம் போன்ற நுட்பியல் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள முயலாது, மேடைப்பேச்சிலும், பட்டிமன்றங்களிலும் கவியரங்குகளிலுமே காலத்தைக் கழித்துத் தமிழின் புகழ்பாடிக் கொண்டிருப்போருக்கு இது புரியாது தான்.)

மேற்சொன்ன முன்னீட்டிற் பிழைகண்ட ஆர்வலர், ”அருள்கூர்ந்து இப்பிழைகளைப் பதிவுசெய்யாதீர். ஒருங்குறிச் சேர்த்தியத்தின் நிலையுறுதிப் பொள்ளிகையாற் (stability policy.) பின்னாலிவற்றை மாற்ற இயலாது போகலாம். இது நுட்பியலாரே முடிவு செய்து ஏற்றுக்கொள்ளும் விதயமல்ல. அருள் கூர்ந்து துறைவல்லுநரோடு பேசுங்கள்” என தமிழிணையக் கல்விக்கழகத்திற்கு அறிவுறுத்தினார். ஆனால் இம்முன்னீட்டின் பின்னிருந்தோரோ, அலுவலணுக்கம் தந்த மதர்ப்பினால் துறையறிஞரோடு உரையாடாது, ”இப்படி மறுபார்வை விழைவோர் ஒருங்குறிச் சேர்த்திய நடைமுறைகளை அறியாத் தற்குறிகள்” எனத்தூற்றி, முன்னீட்டைச்சுற்றிப் பெருங்கற்சுவரெழுப்பினார் (stonewall). முன்னீட்டை வழிநடத்தும் நுட்பியலாரே இப்படி உள்ளார்ந்த நுண்ணரசியலோடு ஆடியதால், ஓராண்டாய் ஏதேதோ முயன்றும், முடிவிலொன்றும் நடவாநிலையில், தமிழக அரசதிகாரிகளையும் அரசியலாரையும் அணுகவேண்டியதாயிற்று.

[ஒருங்குறியையொட்டித் தமிழிணையக் கல்விக்கழகம் (த.இ.க.க.) இதுவரை நடந்துகொண்ட தோரணை எம்போன்றோருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அது அரசாங்கத்தின் சார்பானதா? அன்றி ஒரு சில கணிஞரின் விதப்பு நிகழ்ப்பிற்கு (specific agenda) வழிசெய்கிறதா? - என்று சொல்லமுடியாது இருந்தோம். த.இ.க.க.விடம் உருப்படியான நோக்கமுமில்லை (vision); சரியான ஆக்கமுமில்லை (mission); தமிழுக்கான அடிப்படைத் திட்டமுமில்லை. நிதி வலுவுமில்லை. ”எங்கவீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்”.என்றே இதுவரை அது நடந்துகொண்டது. அண்மையிற் த.இ.க.க.வின் நெறியாண்மையில் (directorship) ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதியவைகள் நடக்கும்போல் தெரிகிறது. இம்மாற்றத்தை வரவேற்போம். த.இ.க.க.வோடு இனிச்சேர்ந்து செயலாற்றமுடியுமாவென்று பார்க்கவேண்டும்.] L2/15-078 எனும் முன்னீட்டைத் தடுத்துநிறுத்திச் சுணக்குவதற்குள் பாலத்திற்கடியில் ஆற்றுநீர் வெள்ளமாய் ஓடியது. (இக்கட்டுரை படிப்போர் இணையத்திற் கிடைக்கும் அம்முன்னீட்டையும் பாருங்கள்.

http://www.unicode.org/L2/L2012/12231-tamil-fractions-symbols-proposal.pdf
http://www.unicode.org/L2/L2013/13047-tamil-frac-rev.pdf
http://std.dkuug.dk/JTC1/SC2/WG2/docs/n4462.pdf
http://www.unicode.org/L2/L2014/14048-srilanka-comments.pdf
http://www.unicode.org/L2/L2015/15078-tamil.pdf

இதுபோக சிரீரமணசர்மா மலையாளத்திற்கும், கிரந்தத்திற்கும் பின்னக் குறியீடுகள் பற்றி முன்னீடு கொடுத்திருக்கிறார். இவற்றிற்கும், தமிழுக்கும் தொடர்புள்ளது. தமிழுக்கு ஒப்புதல் கொடுக்கு முன் இவற்றையும் படிக்க வேண்டும். அந்தந்த எழுத்து வரிசையின் விதப்புமை (specificity) பார்க்காது எல்லாம் ஒன்றுபோற் கருதக்கூடாது.

http://www.unicode.org/L2/L2013/13076-malayalam-fractions.pdf
http://www.unicode.org/L2/L2014/14218-grantha-tamil-numeral.pdf
http://www.unicode.org/L2/L2015/15085-grantha-fractions.pdf

இக்கட்டுரையைப் படிக்கும்போது இவையெல்லாவற்றையும் படிப்பது ஏந்தாக இருக்கும்.) தமிழின் தொல்லாவணங்களைக் காக்க, பின்னங்களையும் சின்னங்களையும் ஒருங்குறியிற் பதிவுசெய்ய வேண்டுமென்பதில் எமக்கு எந்த மாறுபாடுமில்லை. ஆனாற் தமிழ்மரபின்படி,

1. பின்னங்கள், சின்னங்களுக்கான கிறுவங்களின் (graphemes) அடிக்கூறுகள் என்ன (parts of typography)? இவற்றின் வரையறைகளென்ன? இந்தக் கருத்துக்களும், வடிவங்களும் (காட்டாக, ”முந்திரி”) ஒன்றிற்கொன்று பொருந்தியவையா?

2. தமிழெழுத்து அடிக்கூறுகளை இன்னும் நாம் செந்தரப்படுத்தவில்லை. தமிழ் வார்ப்புகளின்/எழுத்துருக்களின் சிக்கல்களுக்கு அதுவே காரணம். தமிழெழுத்து அடிக்கூற்றியலின் (typography of Tamil letters) ஒரு கேள்வி:. பல தமிழெழுத்துக்களைச் சிறு கோட்டிற்தொடங்கி மூக்கொன்றைப் போட்டுப் பின் வளைக்கிறோமே, அம்மூக்கின் முகன்மை நமக்குத் தெரியுமா? அதுதான் தமிழெழுத்தின் அடையாளமா?] அக்கூறுகளின் பொருட்பாடுகளென்ன? எதை வைத்து “ஒரு குறியீட்டின் அடையாளம் இது”வெனும் முடிவிற்கு வருகிறார்? (காட்டு: எண் 3 ம் தமிழ் 3 - உம்)

3. இக்கிறுவங்களின் வரலாறுகளென்ன? கால நடப்புகளும் (occurrence over time), வட்டார வேறுபாடுகளும் (regional variations) நமக்குக் கிடைத்தனவா? அவற்றின் தொகுதியெங்கே? (அங்குமிங்கும் இதுவரை தொகுத்தனவெல்லாம் இரண்டாம் வழித் தொகுதிகளே. நம்மூர் ஆய்வுலகில் இதுவொரு சிக்கல். இரண்டாம்வழி ஆய்வூன்றுகளை மூலமாய்க் காட்டி ஏமாற்றுவது ஏராளம் நடக்கிறது. 1848, 1859, 1862, 1878, 1880, 1906, 1928, 1938, 1950, 1958, 1968 எனப் பல்வேறு வெளியீடுகளைக் காட்டுவதாலேயே இவை சான்றுபெற்றதாய் ஆகிவிடா. இவற்றைத் துறையறிஞர் பார்த்தாரா? - தெரியாது. அகர எழுத்து, மகர எழுத்துப் போன்றவை எப்படி வந்தனவென்பதற்கு 2500 ஆண்டுச் சான்றுகளுண்டு. ”அரைக்காலின் வடிவம்” எப்படி வந்தென்று ஆணித்தரமாய்ச் சொல்லமுடியுமா?

4. இவற்றின் பட்டகைகள் (facts), அரங்கு (range) பற்றி ஓரிரு பொத்தக, பதிவுச்சான்றுகள் போதுமா? முன்நடந்த ஆய்வுகளென்ன? பதிவுகளெங்கே? அவை இம்முன்னீட்டிற் பதிவுசெய்யப் பட்டனவா?

5. இவற்றின் மாற்றுக்கீற்றுக்கள் (allographs) யாவை? எல்லாவற்றையும் பார்த்தாயிற்றா? துறையறிஞர் கருத்தென்ன?

6. அடிக்கூறுகள் ஒழுங்காய்ப் புலப்படா வண்ணம், மாற்றுக்கீற்றுகள் குழம்பிக்கிடக்கின்றனவே? ஒன்று இன்னொன்றைப்போல் மாறிக்கிடக்கிறதே? (காட்டாக ஒரு வடிவத்தைக்காட்டி அது நாலுமாவா? அரைமாவா? - எப்படி உறுதியாய்ச் சொல்வது? அரைமாவும் அரைவீசமும் எப்படி வேறுபடுகின்றன? காலும் அரையும் கூட்டிவரும் முக்கால் வடிவும், காலும் அரையும் பெருக்கி வரும் அரைக்கால் வடிவும் எப்படி வடிவக்கூறுகளால் மாறுபட்டன? முக்குறுணிக்கும் மும்மாவிற்கும் ஒரே வடிவமிருந்தும் இருவேறு குறிப்புள்ளிகள் கொடுத்திருக்கிறாரே, அது எப்படி?) 55 குறியீடுகளிற் படியெடுப்புப் பிழைகளே (copy error) நடந்ததில்லையா? இவற்றிலொரு ஒழுங்குவேண்டாமா? இப்பிழைகளைக் களைந்திருக்கிறோமா?

7. இக்கிறுவங்களில் எவற்றிற்குத் தனிக்குறியேற்றம் தேவை? எவற்றிற்குத் தேவையில்லை? தள்ளியவை ஆவணங்களில் வந்தால் எப்படிக் கையாளலாம்? அதற்கான பொள்ளிகை (policy) என்ன?

8. இக்கிறுவங்களில் எவற்றை வார்ப்புப் பகரத்தால் அல்லது எழுந்துருப் பகரத்தாற் (font substitution) கையாளலாம்? எவற்றை அப்படிக் கையாளமுடியாது? கையாளக்கூடாது?

9. மாற்றுக்கீற்றுகளிலொன்றை எப்படிக் குறியேற்றத்திற் தேர்வு செய்கிறோம்? அத்தேர்விற்கான அறிவியல் வழிமுறைகளுண்டா? இக்கீற்றுக்களுக்கான பருவெண் அலசல்கள் (frequency analyses) எங்கேணும் நடந்தனவா? அன்றி இவையெல்லாம் முன்னீட்டாளரின் அகவயத் தெரிவுகளா (subjective selection)? தேர்வுப் பொள்ளிகை எது? விதிவிலக்கை எப்படிக் கையாளுவோம்?

10. சிரீரமண சர்மா தமிழுக்கு மட்டுமன்றி பங்காளி எழுத்துமுறைகளான மலையாளம், கிரந்தத்திலும் பின்ன, சின்னக் குறியீட்டிற்கான முன்னீடுகள் கொடுத்திருக்கிறார். தமிழ்க்குறியீடுகளின் இயலுமை, ஒப்புமை, தொடர்பைப் பற்றி அவற்றிலும் பேசுகிறார். (பின்ன, சின்னம் பற்றிய) அவருடைய எல்லா முன்னீடுகளையும் ஒருங்கே படித்துப் புரிந்து அடையாளங்கண்டு நாம் பரிந்துரைசெய்ய வேண்டாமா? வெறுமே தமிழ்முன்னீட்டை மட்டும் படித்துக் கருத்துச்சொல்வது ஆய்வில் ஒருபக்கப் பார்வையாகாதா? இது சரியான நெறிமுறையா? அல்லது தமிழில் இக்குறியீடுகளை ஏற்றிவிட்டால், மற்றமொழிக் குறியேற்றங்களைச் செய்வது எளிதெனும் தந்திரவுத்தியா?

11. இன்னும் நிறையப் பின்ன, சின்னக் குறியீடுகள் தமிழிலிருப்பதாகப் பலருஞ் சொல்கிறாரே, எப்படிக் கையாள்வது?. காலவோட்டத்தில் நுணும வெளிப்பாடு (minmum occurrence over time) பார்க்க வேண்டாமா? தனியார் குழூஉக்குறிகள் பொதிந்த ஆவணங்களில் நுணுகி வெளிப்படுஞ் சின்னங்களையெல்லாம் வரைமுறையின்றித் தமிழர்க்குப் பொதுவென்று குறியேற்றப்போனால், அதற்கு வரம்பேது?

12. ஒவ்வொருமுறையும் யாரோவொரு தனியார் தமிழெழுத்தைத் தாக்கும்படி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு முன்னீடு கொடுப்பதும், அதைச் சுற்றிவளைத்து மறுபார்வையர் கேள்வியுற்று எதிர்வினை ஆற்றுவதும், முடிவில் இரு சாராரும் கண்ணாமூச்சி விளையாடுவதும் என 4, 5 ஆண்டுகளாய் அடுத்தடுத்துக் குறியேற்றச் சிக்கல்கள் எழுகின்றனவே? ஏனிப்படி? இதைத் தமிழரின் ஒற்றுமைக்குறைச்சல் என்றெண்ணாது ”இவ்வேலைகளைச் செய்வதற்கு அமைப்பு வரிதியான உள்ளூர் முனைப்புகள் நம்மிடம் எவையிருக்கின்றன? அதற்கான விதிமுறைகள் என்ன? - என்று பார்க்க வேண்டாமா?

என்ற அடிப்படைக்கேள்விகள் எழுகின்றன. இம்முன்னீட்டை உடனிருந்து ஒழுங்குசெய்தவரோ, பின்ன, சின்னங்கள் பற்றிய நுட்பியற்புரிதலை எவரும் உணரவிடாவளவிற்குச் செயற்பட்டார்; முன்னீட்டிற் கொடுத்த 55 குறியீடுகளை விருப்புவெறுப்பன்றி மறுபார்வை செய்யவிடாவளவிற்குத் தடைசெய்தார். பார்ப்பனர்/பார்ப்பனரெதிர்ப்பு எனவிளம்பிச் சிக்கலைத் திருப்பிவிடவும் முயன்றார். மாற்றுக்கருத்தை அணைத்து, இடையாட்டங்களைப் ஒழுங்குசெய்து நகரவிடாவளவிற்கு வேலைசெய்தார்: எழுத்துப்பெயர்ப்பெனும் (transliteration) விளிம்புவளைக்குள்ளே முன்னீட்டைச் சிக்கவைத்து அதைப் பற்றியே பலரையும் பேசவைத்து, ”அதுமட்டுமே சிக்கல்” என ஒருங்குறிச்சேர்த்தியத்தை நம்பவைத்தார்; உள்ளடக்கம் (content) பற்றி யாரையும் பேசவிடாமற் திசைதிருப்பி, ”ஒருங்குறி என்பது கம்பசூத்திரம்; நாங்களதிற் கொம்பன்கள்; முன்னிடுபவரோ ஒருங்குறியிற் பெருங் கில்லாடி; எனவே நாட்டுப்புறங்களாகிய நீவீர் வாய்மூடிச் சொன்னவிடத்திற் கையெழுத்திடுங்கள்” என முன்முடிவுகளோடு அரட்டி அதிகாரம் பண்ணினார்; ஆங்கிலேயத் துரைமாரும் துரைசானியரும் இவரிடம் பாடங்கேட்கவேண்டும் போலும். அப்படியொரு ஆணவம், அவக்கரம், கரவு எம்மிடங் காட்டப்பட்டது, நெடுங்காலம் நம்பி உடன்பழகியவரே இப்படி நடந்துகொண்டதால் எமக்கு வருத்தமே மிஞ்சியது. So power corrupts.

”அச்சடிப்பு ஈடேற்றமே (printed salvation) போதும்” என்றெண்ணி, 19ஆம் நூற்றாண்டிலோ, 20ஆம் நூற்றாண்டிலோ எழுந்த பொத்தகங்களின் சீராக்சுப் (Xerox) படிகளை வைத்துக்கொண்டு, ஒரு முன்னீட்டாளர் விண்ணப்பிக்கிறார். உருப்படியான எந்தப் பயனாளரிடம் கருத்துக்கேளாது, தமக்குத் தெரிந்தோரிடம் 10 தலையாட்டி மின்னஞ்சல்கள் பெற்று, தொடர்பேயில்லா 2,3 மின்மடற்குழுக்களிற் பேசியதாய்க்காட்டி, அக்குழுக்களின் அமைதியை ”ஆமாஞ்சாமி” யாக்கி, தமிழிணையக் கல்விக்கழகத்திடம் நன்னடத்தைச் சான்றைப் பெற்றுவிட்டால், எக்கீற்றத்தையும் தமிழுக்கேற்றும் ஒருங்குறிச் சேர்த்திய நடைமுறையை நினைத்தால் நமக்குத் திகைப்பாகத்தான் உள்ளது.

கிட்டத்தட்ட (இலண்டனிலிருந்த) அந்தக்காலக் கிழக்கிந்தியக் கும்பணிபோல் ஒருங்குறித் துரைத்தனத்தார் ”எதிர்காலத்திற் தமிழாவணங்களை எழுதும் முறையில் எதையுஞ்செய்யலாம்”, என்ற இயலுமை (possibility) நோக்கினால், பயமாகவுமுள்ளது. (இப்படித்தான் துபாசிகள், சமீன்தார்கள், குறுமன்னர்கள் துணையோடு இந்நாடு ஒருகாலத்தில் அடிமைப்பட்டது.) ஒருங்குறிச் சேர்த்திய மேலதிகாரியோடு பேசிப்பார்த்தால், “தமிழர் extreme view கொண்டவரோ” என்றவர் சொல்லுமளவிற்கு இல்லாததும் பொல்லாததுமாய் ஒருபக்கப் பரப்புரை நடந்திருப்பது விளங்குகிறது. ஆக உள்ளூரில் தம் அதிகாரஞ் செல்லும்படிச் சட்டாம்பிள்ளைகளின் ”சண்டப்ரசண்டம்” பெரிதாகவே நடந்துள்ளது. நம் பயத்தை இங்கிலிப்பீசில் (:-)) சொன்னாற்றான் சிலருக்கு விளங்கும்போற்தெரிவதால் அதையும் செய்துவிடுவோம்.

Font-making for generating a language document was originally local with individual and small group initiatives in foundries; (அதனாற்றான் fonts ஐ வார்ப்பென்று ஒருகாலத்திற் தமிழிலழைத்தோம். இக்காலத்தில் ”எழுத்துரு” என்ற சொல்லெழுந்து வரலாற்றை மறைத்து அழகுகாட்டி மயக்குகிறது. என்னைக்கேட்டால் வரலாற்றுப் பொதிவிற்காக ”வார்ப்பே” பழகலாமென்பேன்.) it moved to big national cities culminating with large printers; then it moved to electronic form with the entry of international ”E and IT” corporates; printers ended up as peripheral players. now it is global with encoding acceptance by a standard organization constituted by E and IT companies, font-making by corporates and document generation by the same peripheral printers. Local initiatives are completely taken away in this process. Global initiatives appear to favour one local initiative against the other thus forsaking neutrality in the said matter. Times are changing.

The whole Unicode encoding acceptance process is frought with real dangers. Any Tom, Dick and Harry anywhere in the world can quote an old printed book, (wherever and for whatever purpose it was published) and on that pretext, can point to a specific character and say that it was used by all Tamils thus generalising an insignificant group practice into a predominant one for the entire Tamils. His proposal, if nobody is following entirely, would go unchallenged. (Following up Unicode matters is absolutely a whole-time job involving patience, time and expenditure, and not a part-time passion. Only committed organizations or agenda-concious pestering individuals can do that.) As long as the wiilling authorities approve, with or without the language community's concurrence, all these proposals will definitely lead to changes in the way we would write most of the language documents in future.

We have seen it happening through a character ஶ (codepoint 0BB6) in the last 3,4 years. This is a character not taught in the basic Tamil syllabus anywhere in the Tamil-speaking world even today, but a whole series of consonant and vowel-consonants ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ and ஶௌ is flourishing in internet. Many argue for its intensive use. In front of our eyes, writing in Tamil is changing. (It is no longer சங்கரன் but ஶங்கரன் now.) All because "UC approved the character in its charts; so use it". (Having approved 0BB6, the combined letter ஸ்ரீ is still supported in the look-up table for some strange reasons. What is the code-point for that, I wonder. Perhaps they imply ”ஊருக்குத் தாண்டி உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லெடி.”)

"ஒருங்குறியால் வருங்கேட்டை எங்கே எனக்குக்காட்டுங்கள்?" என்று ஒருங்குறிக்கு “வக்காலத்து” வாங்கிச் சூளுரைக்கும் நுட்பியல் நண்பரொருவர் அறைகூவல் விடுத்துக்கொண்டேயிருப்பார். என்ன செய்வது? மஞ்சளாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாகத்தான் தெரியும். யார் என்ன கண்ணாடி போட்டிருக்கிறார் என்பதிற்றான் சிக்கல். பட்டறிவின்படி பார்த்தால் மேலே தந்ததை ஒரு பானை சோற்றிற்கு ஒரு வாய்ப்பதமாய்க் கொள்ளலாம். I can quote changed habits that happened after incorporation into Unicode Charts. UC approval can be deadly or bonanza to a languge's survival. It can alter the course once for all. Only fools or naive would close their eyes and say that Tamil writing hasn't changed due to Unicode. We are alarmed by the urge to fill gaps in Tamil Unicode with proposals coming in to alter the basics of Tamil Script and establish/ enable a new script for Thamingilam. Superscript for all southern languages is apparently round the corner.  

To us, the Unicode encoding acceptance process consists of a poor and improper evidence submission followed by arbitrary approval and acceptance procedures. Imagine 5 blind men describing an elephant differently by each touching one part that they have access to. It is all the more scary, since we are now arguing not with governments but with an organization promoted by commercial interest. With these procedures, It is quite natural for personnel politics to creep into the approval process, since there are no transparencies. In the approval procedure, there will be gang-up of contasting parties, emotional reactions from the wronged ones and cunning behaviour by the defendants etc. The very process has built-in shortcomings.

அந்தக்காலங்களிற் கல்வெட்டுக்களில் ஏமாற்றுப்புரிதலுண்டு; செப்பேடுகளிற் போலியுண்டு. ஓலைச்சுவடிகளிற் பாடபேதம், இடைச்செருகல், படியெடுப்புப் பிழைகள் எனப்பலவுண்டு; ஒவ்வொன்றையும் கண்ணில் விளக்கெண்ணெய் இட்டு மீளப்படித்து ஒத்திசைவுபார்த்து, ”இதுசரி, அதுசரியில்லை” என்றாய்ந்து வல்லுநர் சொல்லித்தான் நமக்கெதுவும் விளங்குகிறது. இவற்றைச் சரிவர ஆராய்ந்தோரையும் விரல்விட்டெண்ணலாம். (முனைவர் கொடுமுடி ச.சண்முகனின் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்” ஆய்வுநூல்களைப் படிக்காவிடின் எனக்கும் அளவைகள் புரிந்திராது.) அப்படியோராய்வு தமிழ்ப் பின்னங்கள், சின்னங்களுக்கு இதுவரை நடந்ததா? (மதுரைப்பல்கலையில் நடந்ததென்று கேள்விப்பட்டு நண்பர் இர.வா. அண்மையிற் செய்திசொன்னார்.) நெஞ்சத்திற் கைவைத்துச் சொல்லுங்கள். Do we all know the facts? அப்புறமெப்படி விழுந்தடித்துப் பின்ன, சின்னங்களுக்குக் குறியேற்றஞ் செய்யப்போனார்? எந்தத் தொடரி (train) இப்பொழுது கிளம்புகிறது? (தமிழெழுத்தாய்வு 100 ஆண்டுகளாய் நடந்துள்ளது. ”எது, எங்கிருந்து, எப்படி?” என ஓரளவு நமக்குத்தெரியும். பின்னங்கள், சின்னங்கள் பற்றி அந்தளவு பலருக்குந் தெரியாது. எல்லாந் தெரிந்ததாய்க் காட்டும் பெருகுபதிகள் இதிற்சேரார்.)

தமிழ் ஒருங்குறியேற்றமென்பது கணிஞருக்கு மட்டுமே பட்டாப்போட்டுக் கொடுத்ததா, என்ன? ”எம் இராசகுருக்களை மட்டுமே வைத்துக்கொள்வேம், மற்றோரை அழையோம்” என்றாலெப்படி? ”அவர் தனித்தமிழர்; இவர் இன்னார்; அவர் கேள்விக்கணையர்; இவர் அரசியற்பேணி; எனவே இவரை எல்லாஞ் சேர்க்கமாட்டேம்” என்றொதுக்கித் தாமே அரசியல் பண்ணினால் எப்படி? கூட்டுமுயற்சியில் கல்வெட்டியலார், தொல்லியலார், வரலாற்றாய்வாளர், பழங்கணக்குத்தெரிந்தோர், சொல்லாய்வர், தமிழறிஞர், கணிஞர் எனப் பலரைக் கலந்தாலோசிக்க வேண்டாமா? பொத்தகங்களிற் கிடக்கும் தனியார் குழூஉக்குறிகளையெல்லாம் ஒருங்குறியில் ஏற்றுவதெனில் (இர.வா.சொன்னார்: அவரறிந்து 400க்கு அருகில் இவை வருமாம்), நாலுபேர் நடுவிற் துண்டின்கீழ்ப் பரிமாறிக்கொள்ளும் மாட்டுத் தாவணிக் குறிகளை மட்டும் ஏன் விட்டுவைக்கவேண்டும்? அவற்றையும் பத்துக்கோடித் தமிழருக்கு பொதுவானதென்று சொல்லி ஒருங்குறியில் ஏற்றிவிடலாமே?

அண்மையில் தமிழ்ப் பின்ன, சின்னக் குறியேற்றத்தில் நடந்த குழறுபடிகளைக் கண்டு பதறிப்போய், "நமக்குத்தெரிந்த தமிழர் அளவைகளை பொதுமன்றங்களில் எல்லோர்க்குந் தெரிய எடுத்துரைப்போம், இணையத்தில் ஒருபக்கம் இது பதிவாகட்டும். தேவைப்படுகையில், சேர்த்தியங்களும், கணிஞர்களும் தேடும் பாழாய்ப்போன அச்சடிப்பு ஈடேற்றத்திற்காகவாவது ஒருநாள் பயன்படும்" என்ற நினைப்பில் இங்கெழுதத் தொடங்குகிறேன். 6 ஆண்டுகள்முன் 2009 இல் 10 பகுதிகள் கொண்ட ”பழந்தமிழர் நீட்டளவை” என்னுந் தொடரை எழுதினேன். இன்னும் முடியாத அத்தொடரில் நீட்டளவைகளிற் பயனுறுஞ் சுருக்கங்களையும், குறியீடுகளையும் பேசாதிருந்தேன். இனிமேலும் சுணக்காது வேறொரு தருணத்தில் அவற்றைப் பேசவேண்டும்.

http://valavu.blogspot.in/2009/06/1.html
http://valavu.blogspot.in/2009/06/2.html
http://valavu.blogspot.in/2009/06/3.html
http://valavu.blogspot.in/2009/07/4.html
http://valavu.blogspot.in/2009/07/5.html
http://valavu.blogspot.in/2009/07/6.html
http://valavu.blogspot.in/2009/07/7.html
http://valavu.blogspot.in/2009/07/8.html
http://valavu.blogspot.in/2009/08/9.html
http://valavu.blogspot.in/2009/10/10.html

இத்தொடரில் நீட்டளவைத் தொடரின் கருத்துச்சுருக்கத்தையும், வேளாண் பின்புலத்தையும், பரப்பளவை பற்றிய ஓரிரு குறிப்புகளையும் தொட்டுக் காட்டிய பின்னே முகத்தளவை, பின்னங்கள், மற்ற குறியீடுகள் பற்றி முற்றுமுழுதாகவன்றி, ஓரளவு பேசுவேன். ஆனால் தொடர்முடிய நிரம்ப நாட்களாகலாம். ஏனெனில், என் அலைச்சல் கூடி, சிந்தனைத் தொடர்ச்சியின் வேகங் குறைந்துநிற்கிறது. ஏதொன்றையும் எழுதுவதில் இப்பொழுதெல்லாம் நாட்களாகின்றன.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. அரசியலாரையும், அரசதிகாரிகளையும் தொடர்பு கொண்டதில் இந்த முன்னீட்டைப் பற்றிய ஒரு மீள்பார்வை தேவையென்ற நல்லவிளைவு ஏற்பட்டது. த.இ.க.விடமிருந்து ஒரு பகுதியை நகர்த்திச் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியற்றுறையிடம் பொறுப்பைக் கொடுத்து, தமிழ்நாட்டில் இருக்கும் துறையறிஞர்களை (கிட்டத்த 25 பேரில் 21 பேருக்கருகில் வந்தார்கள். 4 பேர் ஏந்துக்குறைவுகள்/ முன்னால் ஏற்றுக்கொண்ட வேலைகளின் நெருக்கு காரணமாய்க் கலந்துகொள்ளமுடியவில்லை.) அழைத்து “இந்த 55 குறியீடுகளை. ஆய்வுசெய்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்று அரசு கேட்டுக்கொண்டது. அவர்கள் இந்தக் குறியீடுகளில் கிட்டத்த 17 குறியீடுகளை விலக்கச் சொன்னார்கள், 20 குறியீடுகளின் வடிவங்களையோ, விளக்கங்களையோ மாற்றச் சொன்னார்கள், 18 குறியீடுகளை ஏற்றுக்கொண்டார்கள். ஆக 67% குறியீடுகளில் மாற்றம் தேவை என்ற முடிவேற்பட்டது.

ஓராண்டு காலம் முறையிட்டதற்கு இவ்வளவு நாட்கழித்து மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. த.இ.க.வும் மாறிவருகிறது. நல்லதே நடக்கட்டும்.

No comments: