Thursday, August 12, 2010

புறநானூறு 2 ஆம் பாட்டு - 3

முதலில் வருவன கீழுள்ள 8 வரிகள்:
.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

மேலுள்ள வரிகளுள் சாங்கியம், உலகாய்தம்/பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய மெய்யியலாளர் சொல்லும் ஐம்பூதத்து இயற்கை விவரிப்பு அடங்கியுள்ளது. இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும், பொருண்மைகளும் ஐம்பூதத்தால் ஆனவை என்பது நம்பா மதங்களைச் சேர்ந்த மெய்யியலாரின் வாதமாகும். பின் எழுந்த நம்பும் மதங்களான சிவ, விண்ணவ நெறிகளும், ஏன் வேத நெறியும் கூட இந்த ஐம்பூதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே பொழுது ஐம்பூதத்தைப் படைத்தவன் இறைவன் என்று கற்பித்துக் கொண்டு அமைந்து போயின. வேதநெறிக்கு எதிரெழுந்த புத்த, செயின நெறிகளும் கூட ஒருவகையில் இக்கருத்தை உள்வாங்கின. ஆனால் கி.மு.600 க்கு அருகில் எழுந்த சாங்கியம், உலகாய்தம் / பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய நெறிகளே ஐம்பூதத்து இயற்கை பற்றித் தெளிவாகப் பேசின. [ஓர் இடை விலகலாக வேறொன்றைச் சொல்லவேண்டும். ஏதேனும் மெய்யறிவியல் பற்றிச் செய்திகள் சங்க இலக்கியத்தில் வந்தாலே அதை வேதநெறி வழியாகப் பார்ப்பதும், இல்லையெனில் செயினம் என்பதுமான அச்சடிப்பு வேலை நெடுநாட்களாகத் தமிழாய்வில் நடந்துகொண்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்களும், நம்பா மதங்களான சாங்கியம், உலகாய்தம்.பூதவாதம், அற்றுவிகக் கருத்துகளும் அங்கொன்றும் இங்கொன்று மாய் விரவியுள்ளன. அதை ஆய்ந்து முற்காலத் தமிழர் மெய்யியலை அடையாளம் காணத்தான் ஆளில்லை. Not everything is always black and white. There are lots of grades of grey in between. It takes courage to discern them.]

மண்திணிந்த நிலன்; நிலன் ஏந்திய விசும்பு; விசும்பு தடவும் வளி; வளி தலைப்பட்ட தீ; தீ முரணிய நீர் என்று ஒன்றிற்கொன்று தொடர்புறுத்தி ஐம்பூதத்தைச் சொல்வார். [வடநாட்டு உலகாய்தத்தில் ஐம்பூதங்கள் கிடையாது விசும்பு தவிர்த்த 4 பூதங்களே அங்குண்டு. எங்கெலாம் இந்தியக் கொள்கைகளில் 5 பூதங்கள் பேசப்படுமோ, அங்கெலாம் தென்னகத் தாக்கம் இருந்ததாய்ப் பொருள்கொள்ள வேண்டும். ஐம்பூதக்கருத்து ஒரு கதைக் குறியீடாகும் (tell-tale sign). ஐம்பூத இயற்கை சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவது நம்மை வியக்க வைக்கிறது. ஆயினும் ”தமிழரா? - சொந்த மூளையிலாத விவரங் கெட்டவர்: என்ற வாதம் இடைவிடாது இந்திய அறிவுய்திகளால் - அறிவுஜீவிகளால் - வைக்கப் படுகிறது.] ஐம்பூதத்திற்கு இணையாய் முறையே பகைவரைப் பொறுத்தலும், பகை வெல்லுதற்கான ஆலோசனைகளின் அகற்சியும், உடல், மனங்களின் வலிமையும், வலி வழி பெறப்படும் ஒறுத்தலும், கருணையும் சொல்லப்படுகின்றன. ”இவ் ஐம்பெரும் தகைகளை உடையவனே!” என்று சேரன் இப் பகுதியில் புகழப் படுகிறான்.

அடுத்த பகுதியைப் பார்ப்போம். இது

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

என்று அமையும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலத்தில் அவன் நாடு குணகடலில் தொடங்கி குடகடல் வரை விரிந்து பரந்திருந்தது. ”உன் குண கடலில் பிறந்த ஞாயிறு அங்கிருந்து பெயர்ந்து மேற்கே ஏகி வெள்ளிய நுரை பொங்கும் மேற்குக் கடலிற் குளித்துப் புத்துருவம் கொள்ளும் நன்னாட்டின் தலைவனே!” என்று சேரன் மேலும் சிறப்பிக்கப் படுகிறான்.

அதாவது இவன் குறுநிலத் தலைவன் இல்லை. அகண்ட ஆட்சிநிலத்திற்கு உரிய வேந்தன். வடக்கிருந்த எவ்வேந்தனுக்கும் இவன் சளைத்தவன் அல்லன். He can challenge anyone up north. He had two seas on both sides of his kingdom. Now this denotes a few things in terms of trade. நிலத்தொடர்பால் வடக்கே மகதநாட்டின் தக்கணப் பாதையைப் பிடித்து சாவத்தி (இன்றைய அயோத்தி) வரை போய் வடபுலத்து வாணிகத்தை நடத்திக் கொள்ள முடியும். [சிலம்பின் காலம் என்ற என் தொடரை வாசகர் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தக்கணப் பாதை என்பது தமிழக- வடபுல வாணிகத்திற்கு இன்றியமையாதது. இதன் முகன்மையை நாம் இன்னும் உணரவில்லை.] மேற்குக் கடல் வழி எகிப்து, பாபிலோனியா, எலாமைத், பாரசீக நாடுகளின் வாணிகத்திற் கலந்து கொள்ள முடியும். கிழக்குக் கடல் வழி தென்கிழக்காசியா, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிகஞ் செய்ய முடியும். இப்படி மூவேறு திசைகளில் வணிகஞ்செய்ய வாய்ப்புக் கிடைத்த நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் ஒரு சிலவே. அப்படியிருந்தவை வளங் கொழித்துச் சிறந்திருந்தன. சேரனின் வணிகச் சிறப்பைச் சொல்ல இந்த மூன்று வரிகள் சிறப்பானவை அல்லவா?

அடுத்த பகுதி:

வான வரம்பனை நீயோ பெரும

என்று ஓரடியால் அமையும். ”வானவரம்பன், இமையவரம்பன்” என்ற சொற்களுக்கு “வானத்தை எல்லையாகக் கொண்டவன், இமையத்தை எல்லையாகக் கொண்டவன்” என்று பல உரையாசிரியர் பொருள் கொள்வார். உண்மையில் எந்நாளும் வானத்தையோ, இமையத்தையோ சேரர் எல்லையாகக் கொண்டவரில்லை. சேரர் இமையம் வரை பலமுறை படையெடுத்துப் போயிருக்கிறார். பாண்டியர், சோழருங்கூட  அதுபோற் செய்திருக்கிறார். அவையெலாம் வஞ்சிப் போர்களே. வடக்கே பல வேந்தரையும், மன்னரையும் தமிழ்வேந்தர் வெற்றி கொண்டுள்ளார் என்பது மட்டுமே உண்மை. வடக்கே எல்லை கொண்டார் என்பது உண்மையல்ல.

“வானத்தை எல்லையாகக் கொண்டவர், இமையத்தை எல்லையாகக் கொண்டவர்” என்பது போன்ற தேவையற்ற உயர்வு நவிற்சி சொல்லுவது தமிழ் வரலாற்றிற்கு நம்பகமிலாத் தன்மையையே வரவழைக்கும். மயிலை சீனி வேங்கடசாமி இக்கூட்டுச் சொற்களை ஏற்றதில்லை. அவர் “வானவர் அம்பன், இமையவர் அம்பன்” என்று பிரித்து, ”அம்பனை” ”அன்பனின்” பேச்சுவழக்குத் திரிபாகக் கொண்டு 2 சொற்களுமே ”தேவர் அன்பன்” என்று பொருள் படுவதாய்க் கொள்வார். இது அசோகர் காலத்திற்குப் பின் மோரியக் குடிவழியினர் “தேவனாம்ப்ரிய” என்று தங்களை அழைத்துக் கொண்டது போல் நாம் கொள்ளலாமென அவர் சொல்வார். சிங்கள அரசன் மூத்த சிவன் மகனான தீசனும் அசோகரின் பாதிப்பால் தன்னை தேவனாம்பிய தீசன் என்று அழைத்துக்கொள்வான். ”தேவன அம்பியன்” என்பது ”தேவன் அம்பன்” என்பதோடு தொடர்புறுவதை நோக்கலாம். அன்பன்> அம்பன் என்ற சொல்திரிவு தமிழுக்கும் பாகதத்திற்கும் இடைப்பட்டதாகலாம். நாம் அன்பு என்று அழைப்பது பாகதத்தில் அம்பு ஆகலாம். பொதுவாக பேரரசன் அசோகனின் தாக்கம் அவன் காலத்தின் பின் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் இருந்தது போலும். புத்த, செயின, அற்றுவிக மதங்களின் தாக்கமும் தெற்கே பெரிதாக இருந்திருக்க வேண்டும். வேதநெறி போலவே, இம் 3 மதங்களும் மாந்தநிலைக்கு மேற்பட்டு தேவ நிலை இருப்பதாகவும் அந்நிலைக்குப் போவது ஆதன்களின் (atmans) முயற்சியால் முடியுமென்ற கருத்தையும் கொண்டிருந்தன. ”தேவர்களின் அன்பைப் பெற்றவன்” என்று சொல்லிக் கொள்வதில் அக்கால அரசர் பெருமிதங் கொண்டனர் போலும். “வானவர் அன்பன் நீ தானோ, என் வேந்தே?” என்ற பொருளையே இந்த வரிக்கு ஈடாய் நாம் சொல்ல முடியும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: